இந்து தருமம் உண்மை மார்க்கம்

Thursday, October 26, 2006

சிலை வழிபாடு தவறா? பாவமா அல்லது அறிவியலா?-1


சிலை வழிபாடு மற்றும் உருவ வழிபாடு ஆகியவற்றை தவறு என்றும் பாவம் என்றும் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது எந்த அளவு சரி? உண்மையிலே சிலை வழிபாடு அல்லது விக்கிரக வழிபாடு என்பது ஒரு பாவமான காரியமா? அது இழிவானதா? சில மாற்றுமத சகோதரர்கள் உருவ வழிபாடு செய்பவர்களுக்கு முடிவே இல்லாத நரக தண்டனையை கடவுள் அளிப்பார் என்று கூட பிரச்சாரம் செய்கின்றனர். இது சரியா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத்தான் நாம் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.

சிலை வழிபாடு அல்லது பொதுவாக உருவ வழிபாடு எனக் கூறப்படுவதுதான் என்ன?




காலம் காலமாக தன்னலமற்ற ஞானிகளால் தியானம் யோகம் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்ட தெய்வத் திருவடிவங்கள் மீது தியானிப்பது மற்றும் பூசனைகள் செய்வது, மனதால் அன்பு செலுத்துவது ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை அடைய மேற்கொள்ளும் முயற்சியே சிலை வழிபாடு ஆகும். ஒவ்வொரு மனிதனும் -ஆணும் பெண்ணும்- அழிவற்ற சத்தியத்தை தன்னுள் உணர முடியும். இது நம் ஒவ்வொருவருடைய பறிக்கமுடியாத உரிமையாகும் என்பது நம் பாரத ஞான மரபு மனிதகுலத்துக்கு அளிக்கும் செய்தியாகும்.




இந்த உருவ வழிபாடு அல்லது சிலை வழிபாடு என்பது ஆழ்ந்த உளவியல் தன்மையை கொண்டது.


நமது பிரக்ஞை என்பது பல தளங்களைக் கொண்டதாகும். அதைப் போலவே நமது அறிதலும் பல நிலைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் அறிதல் என்பது மற்றொரு தளத்தில் அல்லது அறிதல் நிலையில் வேறுபட்டு தெரியும். நாம் அனைவருமே பல தளங்களில் பல அறிதல் நிலைகளில் வாழ்கிறோம். ஒருவரே கூட ஒரே தளத்தில் ஒரே நிலையில் நிலையாக இருந்திடமுடியாது. உணர்ச்சிகளுக்கு இடம் கொடாத மிகச்சிறந்த தர்க்க வாதிகூட தன் குழந்தையைக் கொஞ்சுகையில் உணர்ச்சி மயமாக மாறலாம். ஆன்மிக தேடுதல் இந்த பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரத ஞான மரபின் சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு மானுடகுலத்தின் பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.


இந்த உலகில் வாழும் பெரும் ஆன்மிக மரபுகளில், முக்கிய இறை மார்க்கங்களில், மானுட அறிதலின் பன்மையை ஏற்பவை பாரத தேசத்தின் திருமறைகளே ஆகும்.


எனவே ஒவ்வொரு மனிதருக்கும் அவரது இயல்பிற்கும் அன்பிற்கும் ஏற்றவாறான ஒரு வடிவத்தில் பிரபஞ்சத்தின் ஆதாரமான சத்தியத்தை தியானிக்கவும் வழிபடவும் உருவாக்கப்பட்ட வழிமுறையே உருவ வழிபாடாகும். உருவ வழிபாட்டின் மூலம் எல்லையற்ற பரம்பொருளில் ஆன்மா லயிக்க முடியும். ஆதி அந்தமற்று விளங்கும் பரம்பொருளை உணர்வுப்பூர்வமாக ஒரு வடிவத்தில் ஏற்று வணங்குவது என்பது அழிவற்ற நித்திய சத்தியத்தைத் தேடும் ன்ம சாதனையில் முதல் கட்டமாக மட்டுமின்றி முக்கிய கட்டமாகவும் விளங்குகிறது. பாரத சிலை வழிபாட்டின் மற்றொரு முக்கிய அம்சம். அக-பிரபஞ்சத்தையும் (micro-cosom) புற-பிரபஞ்சத்தையும் (macro-cosom) இணைத்திடும் ஆதார குறியீடுகளை மனிதகுலத்துக்கு நமது சிலை வழிபாடு அளித்துள்ளது.


அறிவியலும் உளவியலும் (psychology) ஆழமும் விரிவும் அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரத மெய்யியலாளர்கள் மனிதகுலத்துக்கு அருட்கொடையென அளித்த ஆன்மீக திருவுருவங்கள் மென்மேலும் தம் ஞான வெளிப்பாட்டில் விரிவடைந்துள்ள விதம் அறிவியலாளர்களையும் தத்துவஞானிகளையும் வியக்க வைத்துள்ளது.




இது குறித்து விரிவாக விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அவர்களது வார்த்தைகளிலேயே பின்னர் கேட்க உள்ளோம். அதற்கு முன்னால் பாரதத்தில் சிலை வழிபாட்டின் விக்கிர ஆராதனையின் தொன்மை குறித்து வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ள கருத்துக்களை காணலாம்.

Tuesday, October 24, 2006

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.





பிள்ளையார் நம் பாரதம் முழுவதும் வணங்கப்படும் சாமி.

தொல்காப்பியத்திலும் புறநானூறிலும் கூட பிள்ளையார் குறித்து குறிப்புகள் உள்ளதென அறிஞர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில் செந்தூரம் பூசப்பட்ட ஆனைத்தலை வடிவங்கள் கிடைத்துள்ளன.



எந்த நல்ல காரியம் செய்வதானாலும் பிள்ளையாரை வணங்கி தொடங்குவது தமிழர் மரபு ஆகும். இன்று அது பாரதம் முழுவதும் ஏற்கப்பட்டுள்ள மரபாகியுள்ளது. தமிழ் குழந்தைகள் அனைவருக்குமே அன்பு பாட்டி முதுபெரும் மூதாட்டி ஔவையார். அந்த அமுதின் இனிய சொற்களை நமக்கு வழங்கிய பாட்டி வணங்கிய தெய்வம் பிள்ளையார்.

இவரது தெய்வத் திருவடிவம் பல சத்திய தத்துவங்களை காட்டுவதாக அமைகிறது. இது குறித்து சிலை வழிபாடு குறித்த பதிவில் பின்னர் விளக்கமாக பார்க்கப்போகிறோம். முந்தி முந்தி விநாயகர் தொந்தி கணபதி தும்பிக்கை நாதர் தாள் வணங்கி இந்த எளிய பணியை தொடங்குகிறேன்.

இந்து தருமம் : உண்மையான உலகப் பொது அறம்


கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரத கண்டத்தில் மகத்தான நெறியாக விளங்கிவருவது இந்து தருமம் ஆகும். பற்பல சோதனைகள் பற்பல படையெடுப்புகள் ஆகியவற்றிற்கு மேலாக சத்தியத்தை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து அளித்து வரும் தருமம் இந்து தருமமே ஆகும். நூற்றுக்கணக்கான மொழிகளில் இலக்கிய வளத்தினை செழுமைப்படுத்தியுள்ள தருமம் இந்து தருமமே ஆகும். பல இன மக்களை இன உணர்வுகளுக்கு அப்பால் ஒருங்கிணைத்த தருமம் இந்து தருமமே ஆகும். உலகத்தின் அனைத்து மத சம்பிரதாயங்களையும் தன்னுள் ஏற்கும் அன்னைத்தன்மை கொண்ட தருமம் இந்து தருமமே ஆகும்.

ஆனால் துரதிட்டவசமாக காலனிய ஆதிக்கத்தாலும் அன்னிய படையெடுப்பாலும் சமுதாய தேக்க நிலையினாலும் ஏற்பட்டுள்ள பல சமுதாய தீமைகளுக்கு இந்து தருமமே காரணம் என்று சில நிலை தடுமாறிய சகோதரர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் பாரதத்தின் சமுதாய தீமைகளும் அவலங்களூம் வாழையடி வாழையாக வந்த இந்து தரும அருளாளர்கள் தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய போதித்த வேத சத்தியங்களை இந்தியர்களாகிய நாம் மறந்ததாலேயே ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வலைப்பதிவு நம் நாட்டின் சத்திய வேத நெறியான இந்து தருமம் தனிமனித-குடும்ப-சமுதாய-தேசிய தளங்களில் நமக்கு அளித்துள்ள கடமைகளையும் நெறிமுறைகளையும் விளக்கிட முயலும் எளிய முயற்சியாகும். இந்து தருமம் என்பது பௌதீக பிரபஞ்சத்தினைக் காட்டிலும் விரிவும் ஆழமும் உடையது. அதனை என்னைப் போன்ற எளிய பாமரன் விளக்கிட முயல்வது என்பது நரி வாலால் கடலாழம் பார்த்த கதைதான்.


ஆனால் உலகிற்கே ஒளியாக விளங்கும் இந்து தருமத்திற்கு நாயேன் அளிக்கும் ஒரு வணக்கமே இது. இந்த தருமத்தினை நானும் என் சந்ததிகளும் பின்பற்றிட இந்து சமுதாயம் செய்திட்ட பெரும் தியாகங்கள், இந்து தருமத்தின் சத்தியத்தினை தம் வாழ்க்கையில் உணர்ந்திட்ட பெரும் மகான்கள் ஆகியவர்களின் நினைவுக்கு அடியேன் அளித்திடும் ஒரு சிறு சமர்ப்பணம் இந்த வலைப்பதிவு.


ஆதி ஆதி காலம் தொட்டு வந்த தருமம். ஆதி மூல சத்தியத்தை கண்ட தருமம். ஓதி ஓதி வேதங்களை உரைத்த தருமம். நீதி தேவன் கோவில் கொண்டு நிலைத்த தருமம். அதுதான்
இந்து தருமம். முற்றும் உணர்ந்த இந்து தரும முறை அறியாமல் தவறு கூறும் அறியா மனங்களை அன்பால் திருந்த செய்குவோம்.